தாய்-1
தாயின் இறுதிக் கடன்
------------------------------------------
நடந்து போக நான் பிடிக்க நீட்டியவிரல்
பசியாற பால் கொடுத்த தேகம்
புசித்திட புகட்டிய பாகம்
காலைக் கடனில் ஒன்றைக்
கழித்த குத்துக் கால்களும்
இவன் அக்கம்பக்கம்
அலைந்திட வேண்டி
குந்தியிருந்த கக்கமும்-நான்
காயப்பட்டபோது கலங்கிய கண்களும்
என்னைக் கைக்குழந்தையாய் ஏந்தி
என் கன்னம் சாய்த்த கன்னங்களும்
மகனை வாழ்த்திய வதனமும்
துயில்மடிந்த மடியும்-இவை
மொத்தமாய் மடிந்து மல்லாந்திருந்தாள்
தீயின் பசிக்கு தாயைத் தந்தேன்
திரும்பாதே என்ற தகவலுக்கு
தலைவணங்கி-நான்
விரும்பிய வாழ்க்கையை
வழங்கியவளை விட்டுவிட்டு
வருந்திய படியே
வெறும் கையோடு
வீடு திரும்பினேன்.....
சந்ததி காண
சாம்பலைத் தின்றவள்-ஆண்டவன்
சந்நிதி காண
சாம்பலாகிப் போனாள்.
Comments
Post a Comment